Friday 13 June 2014

யாதவராயர்கள்

யாதவராயர்கள் என்போர் 12,13ம் நூற்றாண்டுகளில் சோழர்களின் கீழே இருந்த குறு நில மன்னர்கள்.
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்ட இவர்களின் ஆட்சி போசள அரசன் வீர வல்லாளனுக்கு அடியிலும்,
பின்னாளில் 14-ம் நூற்றாண்டில் விசய நகரப் பேரரசிற்கும் அடியில் தொடர்ந்தது. இவர்கள் கீழைச்
சாளுக்கியர்களின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மேலும் தென் தமிழக யாதவர்களுக்கும் தொண்டைமண்டல யாதவர்களுக்கும் யாதவராயர் என்ற பட்டம் இருந்தது.யாதவராயர்கள் கிட்டத்தட்ட மாநில
ஆளுநர்கள் போலச் சோழர்களுக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள். இவர்கள் திருக்காளத்திக் கோயிலிலும்,
திருவேங்கடம் கோயிலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

இவர்களின் முதல் அரசன் சாளுக்கிய நாராயணன். அவன் பேர்கொண்ட மரக்காலில் தான் திருவேங்கடம்
கோயிலில் 17-ம் நூற்றாண்டு வரை கோயிலுக்கு வரும் கூலங்களை (தானியங்களை) அளந்திருக்கிறார்கள்.
இந்தக் குலத்தில் வந்த வீர நரசிங்க தேவன் (கி.பி.1205 - 1262) துலாரோகணம் (துலையின்
ஒருபக்கத்தில் இவனும் இன்னொரு தட்டில் பொன்னும் இட்டு அளந்து அதை கோயிலுக்குக் கொடுப்பது) செய்து வந்த
மாழையைக் கொண்டுதான் கோயில் விமானத்திற்குப் பொன் வேய்ந்திருக்கிறார்கள். இன்றும் அந்தப்
பொன்வேய்வை நாம் பார்க்கிறோம். சென்னையின் அருகில் உள்ள திருவொற்றியூரில் தன் பெயரிலேயே வீர
நரசிங்கேசுவரம் உடைய நாயனார் என்றபெயரில் படிமம் அமைத்துள்ளான்.

இந்த யாதவர்களின் கடைசி அரசன் பெயர் ஓபள யாதவன். இவன் தஞ்சையின் அரசன் என்றும் சொல்லப்
பெறுகிறான். காரணம் புரிபடவில்லை. ஓபளனைப் பற்றிய கீழே வரும் இந்த வெண்பா இன்னிசை வெண்பாப்
போல் தெரிகிறது. (ஆனால் தளை எங்கோ இடிப்பது போலவும் தெரிகிறது.) கல்வெட்டில் சிதைந்து
காண்பதால் இங்கே ஒரு சீரும் குறைகிறது.

ஓதவளர் வண்மை ஓபளநா தன்தஞ்சை
யாதவர்கோன் வாழ்வினி தூழிபுக
மருக்குலவும் சோலை வடவேங்கட வாணர்க்குத்
திருக்கைமலர் தந்தான் சிறந்து.

பழங் கல்வெட்டில் வந்துள்ள வேறு ஏதேனும் வெண்பாக்கள் இருந்தால் இடுங்களேன். ஒலையில் இருந்தவற்றை மட்டும்
தானே நாம் அறிந்துள்ளோம்.

1 comment:

  1. ஓதவளர் வண்மை ஓபளநாதன்தஞ்சை
    ஆயர்கோன் வாழ்வினி தூழிபுக
    மாகுலவும் சோலை வட வேங்கட வாணர்க்குத்
    திருக்கைமலர் தந்தான் சிறந்து .

    இதில் ஆயர்கோன் என்ற மன்னன் தஞ்சை ஆண்ட குழுமத்தின் தலைவர்.இவர் எல்ல வளங்களையும் தன்மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார் திருவேங்கடம் வரை.

    ReplyDelete