Saturday 1 March 2014

யது குல வேல் பாரி வேளிரின் சிறிய கதை





பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத்  தேர் கொடுத்த சிலை
வடிவக் காட்சி


பறம்பு மலை

யது குல வேல் பாரி வேளிரின் சிறிய கதை:
எப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டே தீர வேண்டும் என்பது நியதி போலும். பாரி தன் குடியைப் பற்றி கொண்டிருக்கும் பெருமித உணர்வு ஏற்கனவே கபிலருக்குத் தெரியும் என்றாலும் அதைப் பற்றிப் பேசி விவாதிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உயிரினும் மேலாகப் பழகும் நண்பர்கள் தங்களிடையே இருக்கும் கருத்து வேற்றுமைகளைக் கடைசியில் மறந்துவிட்டு ஒருவருக்கொருவர் ஆதரவாகத் தான் தொடர்கிறார்கள்.

மாளிகைத் தோட்டத்தில் பாரியும் கபிலரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுரைக்குச் சென்றிருந்த இரு வார காலத்தில் பறம்பில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பாரி சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது தான் மாறி மாறி மூவேந்தர்களிடம் இருந்தும் பாரி மகளிரைப் பெண் கேட்டு வந்த விவரத்தைச் சொன்னார். மதுரையில் இருக்கும் போது பாண்டியன் இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று வியந்தார் கபிலர். மொழி ஆய்வில் இருக்கும் போது அரசியலும் அந்தரங்கமும் பேசவேண்டாம் என்று விட்டுவிட்டானோ என்னவோ என்று எண்ணிக் கொண்டார்.

"இது என்ன வேடிக்கையாக இருக்கிறது பாரி?! முடியுடை மூவேந்தர்களுள் ஒருவர் உன் மக்களைப் பெண் கேட்டால் அவருக்கு மணம் செய்து கொடுக்கலாம். இப்படி மூவரும் கேட்டால் யாருக்குப் பெண் கொடுப்பது? இது என்ன சங்கடமான நிலைமை?"

"கபிலரே. மூவரும் பெண் கேட்டு வந்ததில் எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் இந்த மூவரில் யாருக்குமே பெண் கொடுக்கப் போவதில்லை"

"ஏன் பாரி? ஒருவருக்கோ இருவருக்கோ உன் மக்களை மணம் முடித்தால் மற்றவர் பகை ஏற்படும் என்பதாலா?"

"அவர்கள் பகையைப் பற்றி எனக்குக் கவலையில்லை கபிலரே. அவர்கள் யாருமே என் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி இல்லாதவர்கள். அதனால் தான் அவர்களுக்குப் பெண் தர மாட்டேன் என்கிறேன்"

"என்ன சொல்கிறாய் பாரி? உன்னைப் போன்ற குறுநில மன்னவன் பெண்களை வழி வழியாக பெரும் நிலப்பரப்பை ஆண்டுவரும் இந்த மூவரும் பெண் கேட்டு மணப்பது நடைமுறையில் உள்ள ஒன்று தானே? இவர்களுக்கு ஏன் உன் மக்களை மணக்கும் தகுதி இல்லை என்று நினைக்கிறாய்? செல்வத்தில் குறைந்தவர்களா? வீரத்தில் குறைந்தவர்களா? புலவர்களையும் பாணர்களையும் புரப்பதில் குறைந்தவர்களா? எவ்விதத்திலும் எனக்கு அவர்களிடம் குறை தோன்றவில்லையே?!"

"கபிலரே. நான் சிற்றரசன் தான். அவர்கள் வேந்தர்கள் தான். பெரும் நிலப்பரப்பை பல்லாண்டு காலங்களாய் ஆண்டு வருபவர்கள் தான். அவர்களின் செல்வத்திலும் வீரத்திலும் பாவலர்களைப் புரப்பத்திலும் எந்த குறையும் இல்லை. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்னொரு குறை இருக்கிறது. வேளிர் குடியில் பிறந்த என் மக்களை மணக்கும் தகுதி இம்மூவருக்கும் கிடையாது"

இதனைக் கேட்டுப் பெரும் அதிர்ச்சி அடைந்தார் கபிலர்.

"பாரி. மூவரில் மூத்த குடியான பாண்டியனுக்குமா உன் மக்களை மணக்கும் தகுதி இல்லை என்கிறாய்?"

"ஆம் ஐயனே. மூவரில் முதல்வன் ஆனாலும் பாண்டியனின் குடியும் வேளிர் குடிக்குப் பிற்பட்டதே. தமிழக வரலாற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணுகிறேன்"

"பாரி. தமிழக வரலாறு எனக்கும் தெரியும். வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்டத் தமிழ் கூறும் நல்லுலகில் முடிவேந்தர் பரம்பரை மூன்று இருக்கின்றன. வஞ்சிக்காவலன் சேரனும் புகார்க்காவலன் சோழனும் கூடல்காவலன் பாண்டியனும் என்று இந்த மூவரும் பல்லாண்டு காலமாக ஆண்டு வருகின்றனர். அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் எண்ணற்ற சிற்றரசர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடங்காமல் தன்னாட்சி செய்துவருபவர்களில் நீயும் ஒருவன். உன் வேளிர் குடி இந்தப் பறம்பு நாட்டை மூவேந்தர்களுக்கும் முந்தைய காலம் முதல் ஆண்டு வருகிறது. அப்படி மூத்த குடியாய் இருப்பது ஒரு தனிப்பெருமை தான். ஆனால் அந்தப் பெருமை மூவேந்தர்களுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் அளவிற்குச் செல்ல வேண்டுமா? வேண்டாம் பாரி வேண்டாம். இது விபரீதம் விளைவிக்கும்"

"கபிலரே. எந்த விதமான தொல்லைகள் நேரிட்டாலும் நான் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்."

"பாரி. இது சரியில்லை. மூவேந்தர்கள் ஆளத் தொடங்குவதற்கு முன்னர் தமிழகம் முழுவதும் வேளிர்கள் தானே ஆண்டார்கள். வேளிர் குடியில் பிறந்தவன் நீ மட்டும் இல்லையே? வேறு அரசர்களும் இருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் மூவேந்தர்களுக்கும் பெண் கொடுத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். நீ மட்டும் ஏன் மறுக்கிறாய்?"

"கபிலரே. வேளிர் குடியில் பிறந்த மற்ற அரசர்கள் வேந்தர்களுக்குப் பெண் கொடுக்கிறார்கள் என்பதை அறிவேன். அது ஏன் என்பது உங்களுக்கும் தெரியும். வேளிர் குடிப்பெருமையை அறிந்த வேந்தர்கள் தங்கள் குடிகளுக்கும் அந்தப் பெருமை வேண்டும் என்பதற்காகத் தானே வேளிர் பெண்களை விரும்பிக் கேட்டு மணக்கிறார்கள். அவர்களின் படைவலுவைக் கண்டு வேளிர்களும் பெண் கொடுக்கிறார்கள். அப்படிப் பெண் கொடுக்கும் வேளிர்கள் யாருமே வேந்தர் குடிப் பெண்களை எடுப்பதில்லை என்பதையும் கவனித்திருப்பீர்கள். அது ஏன்? வேந்தர்களின் குடி வேளிர்களின் குடியை விடக் குறைந்தது என்பதற்காகத் தானே? நான் மட்டும் இல்லை கபிலரே. என்னைப் போல் வேந்தர்களின் படைவலிமைக்கு அஞ்சாமல் பெண் தர மறுக்கும் வேளிர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தினையே நானும் கொண்டிருக்கிறேன். வேளிர்கள் வேந்தர்களிடமிருந்து பெண் எடுப்பதும் கூடாது; கொடுப்பதும் கூடாது"

"பாரி. இப்படி நீ மறுத்தால் மூவேந்தர்களின் சினத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும். உன் குடிப்பெருமை உன் நாட்டையும் உன்னையும் உன் சுற்றத்தையும் அழிக்கும். அது வேண்டாம் பாரி. மூவரில் ஒருவருக்கோ இருவருக்கோ உன் மக்களை மணம் முடித்து வை"

"கபிலரே. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அவை அனைத்தையும் விட குடிப்பெருமை காக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு வேளிர் குடியில் பிறந்தவனும் நினைப்பான்."

"பாரி. வள்ளல்கள் என்றாலே வேளிர்கள் என்று சொல்லும் அளவிற்கு வேந்தர்களை விட வேளிர்கள் வள்ளல்களாக இருக்கிறீர்கள். அது தான் வேளிர்குடிக்குத் தனிப்பெருமை என்று எண்ணினேன். நீயோ மூத்தகுடி, தொன்று தொட்டு ஆண்ட குடி என்று சொல்லி வேந்தர்களுக்குப் பெண் தர மறுக்கிறாய். வேதனையாக இருக்கிறது"

"ஐயனே. உங்களைப் போன்ற நல்ல நண்பர்களை வேதனைப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். வேந்தர்களைப் பற்றிய கவலை உங்களுக்கு இருந்தால் தாங்கள் பறம்பு நாட்டிலிருந்து விலகி பாதுகாப்பான வேறெங்காவது சென்று விடுங்கள்"

"என்ன வார்த்தை சொன்னாய் பாரி? நமக்குள் இருக்கும் நட்பு அவ்வளவு தாழ்வானதா? தமிழறிஞன் என்பதை விட உன் நண்பன் என்பதில் தானே எனக்குத் தனிச்சிறப்பு கிடைக்கிறது. அப்படிப்பட்ட நட்பைத் துறந்துவிட்டு உயிர் பிழைக்க ஓடிப் போவேன் என்றா எண்ணினாய்? நீ இவ்வளவு உறுதியாக இருந்தால் அந்த உறுதியை நானும் ஏற்றுக் கொள்கிறேன். உன் எண்ணப்படியே நடந்து கொள்வோம்"

"தாங்கள் என் அருகிலேயே இருக்க நினைப்பதை எண்ணி மகிழ்கிறேன் கபிலரே. பெண் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து அனுப்பியிருக்கிறேன். இந்தத் திங்களே மூவரும் படையெடுத்து வர ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்."

"அப்படியா? அவையில் பரிசில் வழங்கும் உன் கைவண்மையைக் கண்டிருக்கிறேன். களத்தில் உன் கைவன்மையைக் காணும் நாளும் நெருங்கியதோ"

வருத்தத்துடன் கபிலர் சொன்னதைக் கேட்டு பாரி புன்னகை புரியும் போது அங்கவையும் சங்கவையும் தோட்டத்தில் நுழைந்தனர்.

2 comments:

  1. எச்சரிக்கய் :
    சாதி பெருமய் பேசும் இத்தகய புனய்வுகள் வெளியிடுவது தமிழ்ச் சமுதாய நலனுக்கு எதிரானது. தமிழர் சாதிகளின் பெயரால் தற்பெருமய் பேசுவதும் ஒருவர் இன்னொருவருக்கு மேல் கீழ் என்று பேசுவதும் இங்குள்ளவர்களுக்குள் பகய் உருவாக்க நினய்ப்போரின் சூழ்ச்சிதான். இவர்களின் சூழ்ச்சி வலயில் யாரும் விழாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் தமிழினப் பகய்வர் என இனங்காண வேண்டும்.

    ReplyDelete
  2. சேர சோழ பாண்டியர்கள் மூவரும் வேளீர் மரபினர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து அது இருக்கட்டும் வேள்பாரியின் இந்த கதையை முழுவதும் கூறவும் பாதியில் நிறுத்தியது மிகவும் வருத்தமாக உள்ளது

    ReplyDelete